திகிலி வெட்டை குளமதில் பூத்த தாமரையொன்றில்
உதிர்ந்த இதழ்களிடையே சிங்கத்தின் உரோமங்கள் சிக்கிக் கிடந்தன
தாமரையில் கண்ணீர் தேங்கியிருந்தது
அது இருளில் கிடந்த
ஆயிரக்கணக்கான விழிகளைத் திறக்கச் செய்தது
கிழக்கில் உதயமாகிச் சூரியனும் உச்சிக்கு வந்தது
ஒளி வழங்காத சூரியனிடமிருந்து இருளே கசிந்தது
வெள்ளை நிற மல்லிகை
மொட்டொன்று இருளில் தனித்துப் போனது
மெல்லிய புகைபோன்று சூரியன் கசிந்து கொண்டிருந்தது
வாளினை ஏந்திச் சிங்கம் கொடிதனில் அசைந்தாடியது
இலிங்கத்தை ஏந்தியபடி இராணுவம் எங்கும் அலைந்தது
மல்லிகை மொட்டொன்றை நடுவீதியில் சிதைத்தது
கீதம் பாடும் மீனொன்றை வதைத்துக் கொன்றது
அரசனோ இளவரசனோ ஒப்புதல் தந்தது
அத்துனை எளிதாயிற்றா மகளை சிங்கத்துக்குக்
கொடுத்தது
தங்க விதைகளையா இனியும் தேடுவது
சிங்கங்களே இனி உங்களை
நாய்களென்றா அழைப்பது
தாய்ப்பால் வாசனை மறவாத
அழகிய பூவொன்றுக்கு
தான் விளையாடித் திரியும் ஊர்மனை தொலைதூர இடமில்லை
தாய்நாட்டைக் காக்கும் வீரர்கள் இருக்கும் பாதையில்
செளபாக்கியமெங்கே சுவாசிக்கக் கூட முடியவில்லை
புற்பூண்டிழந்து போய்க் கிடக்கின்றது சித்தண்டி - அங்கே
மனமெங்கும் வியாபித்திருந்த விஷத்தை மட்டுமா கொட்டினீர்கள்
வாய் திறந்தாலே தர்ம போதனைகளை
உரைக்கின்றவர்களே
இந்த நரகக் கிடங்கு
உங்களுக்கு அழகாகத் தெரிகிறதா
தமிழில் – ஃபஹீமாஜஹான்
நன்றி
# மகுடம் இலக்கிய இதழ் - 03
# எதுவரை இலக்கிய இதழ் - மார்ச், 2013
# ஓவியர் நளீம்.