Tuesday, November 7, 2017

உன்னிடம்தான் தரித்திருக்கிறது மகளே எம் சுவாசக் காற்று



செய்திஇலங்கை, கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலையொன்றில்,  பட்டினியின் காரணமாக வாந்தியெடுத்த 14 வயது மாணவியை, கர்ப்பிணியென பழி சுமத்தி அப் பாடசாலையிலிருந்து நீக்கி விட்டார் பெண் அதிபர். கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த அந்த ஏழைச் சிறுமி தூய்மையானவள் என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பின்னர் தெரிய வந்தது.




இரவு பகலாகக் கூலி வேலை
தினம் ஒரு வேளை  மட்டுமே உணவு
மகளுக்குக் கல்வியளிக்கப் பாடுபட்டு
வாடி வீழ்ந்தோம் நாம் கைகால் வலுவிழக்க


கல்வி மாத்திரமே அவள் சூடியிருக்கும் மாலை
அதுவே எமதும் ஒரே கனவு
அக் கனவுக்கு வேட்டு வைத்ததில்
சிதறியது முத்து மாலை
இனி எவ்வாறு கோர்ப்போமோ அதை
ஜீவிதம் எனும் நூலிழையில்


சொற்களால் பின்னப்பட்ட புத்தகங்களின்
பக்கங்கள் கிழிந்து கிடக்கின்றன
சொற்களை உச்சரித்து வாசிக்கும்
உதடுகள் பூட்டப்பட்டிருக்கின்றன
வழமை போல தலையுயர்த்திப் பார்க்கவியலா நிலையில்
வீழ்ந்தழுகிறாள் எமது மகள்


தேயிலைச் சாயத்தால் மாத்திரம்
வயிறு நிரம்பும் நாட்கள் அநேகம்
ஒவ்வொரு ரூபாயாகச் சேமிப்பாள்
புத்தகங்களை வாங்கவென
சீருடையும் கூடக் கிழிந்து
கந்தலாகிக் கறை படிந்து கிடக்கையில்
பிளவுண்ட இதயத்தை நிரப்புவது இப்
பெருந் துயரம் மாத்திரமே


வாந்தியெடுக்கும் பட்டினி வயிறுகள்
முடிவற்றவை
பசியை அறியாதவர்களுக்கு அவை
தெளிவற்றவை
மனிதாபிமானமற்ற உயரதிகாரிகளுக்கு
போதுமானவையா பதவிகள் மாத்திரம்
எவரும் எதையும் கண்டுகொள்ளாமல்
வாய் கண் மூடிக் கிடப்பதுவும் விசித்திரம்தான்


இம் மகளே எமதுலகின் ராஜ கிரீடம்
சந்திர சூரியனாக ஒளிரும்
எமது ஆகாயத்தின் பெரு வெளிச்சம்
கலங்கிய நீர்க்குளத்தின் உச்சியில்
எப்போதும் பூத்திருக்கிறாள் எமது மகள்
செந்தாமரைகள் எழுவது சேற்றிலிருந்துதான்


இருக்கக் கூடும் இம் மகளைப் போலவே
அழுது புலம்பும் பல மகள்கள்
இப் பார் முழுதும்
யாருக்கெல்லாம் கேட்கின்றன
அந்த அழுகுரல்கள்?
அதிகாரத்துக்கே எவரும் தலைசாய்க்கும் நிலையில்
நூலிழையில் முடிந்து வைக்கவா
இருக்கிறது நீதி?

- துஷாரி ப்ரியங்கிகா
தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - விடிவெள்ளி, கல்குடாநேசன், வல்லமை, பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம்

Wednesday, November 1, 2017

அவர்கள் நம் அயல்மனிதர்கள் - 08 - எம்.ரிஷான் ஷெரீப்



     இலங்கையை ஆட்கொண்டிருந்த யுத்த மேகம் அகற்றப்பட்டு வருடங்களாகின்றன. போர் சூழ்ந்த தீவின் தேகம், நோய் நீங்கி படிப்படியாக ஆரோக்கியத்தின் பக்கம் மீண்டு கொண்டிருக்கிறது. பழைய காயங்களின் தழும்புகள் இப்பொழுதும் இருக்கின்றனதான். தேசத்தின் ஆயுட்காலம் முடிவதற்குள் அவற்றைக் காலம் ஆற்றியும், மாற்றியும் விடும். அடுத்தடுத்த தலைமுறைகள் நாட்டின் புது மினுமினுப்பிலும், பளபளப்பிலும் அமர்ந்து இலங்கையின் போர் வரலாற்றை பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கக் கூடும்.

     ஆனாலும், நாம் மறந்து விடக் கூடாத, மறந்து விட முடியாத போர் வீரர்கள் இரு தரப்பிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமது மொழிக்காகவும், தமது மண்ணுக்காகவும், தமது மக்களுக்காகவும் தாம் கொண்ட இலட்சியத்துக்காகவும் எந்தப் பிரதிபலனையும் பாராது தமது உயிர், பலம், இளமை, ஆரோக்கியம் என அனைத்தையும் அர்ப்பணித்து யுத்தம் செய்தவர்கள் ஒரு புறம். வறுமை, வேலை வாய்ப்பின்மை, அரச உத்தியோகம், நல்ல வேதியம், சமூகத் தொண்டு, ஒரே தாய்நாடு போன்ற பல காரணங்களுக்காக அரசாங்கத்தோடு இணைந்து போராடியவர்கள் மறுபுறம்.

     இரு தரப்பினரையுமே போர் மிக ஆழமாகவும், மோசமாகவும் மென்றது. அதன் பற்களில் அகப்பட்டு உயிரோடு எஞ்சிய போர் வீரர்கள் பலரும் தம் வாழ்நாள் முழுவதும் அங்கவீனர்களாக வாழ விதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த மக்களது சௌபாக்கிய வாழ்க்கைக்காக தமது உயிரைக் கொடுத்துப் போராடினார்களோ அந்த வீரர்களது கண்ணீருக்கும், உயிர்களுக்கும், காயங்களுக்கும் மதிப்பற்றுப் போன ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     இலங்கையின் பெருநகரங்களை விடவும், வறுமை சூழ்ந்த கிராமங்களிலிருந்து தமது வாழ்வாதாரத்துக்காக வேண்டி இராணுவத்தில் இணைந்து போரிட்ட இளைஞர்களே அதிகம். அவர்களுள் பலரும் இன்றும் கூட உடலின் பாகங்களை இழந்து ஊனமுற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதிகாரம் படைத்தவர்கள் கூட அவர்களைப் புறந் தள்ளிவிடும் உலகில், அவர்கள் வழிபடும் தெய்வங்கள் மாத்திரமே அவர்களை இன்னும் வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ளச் செய்து, வாழச் செய்து கொண்டிருக்கின்றன.

     அவ்வாறாக ஊனமுற்றுள்ள இராணுவ வீரனது ஒரு நாள் வாழ்வியலை எடுத்துச் சொல்கிறது கவிஞர் மஹேஷ் முணசிங்ஹவின் இக் கவிதை.

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும்

முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்


பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது


'நாட்டைக் காக்கும்' எனக்கு காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து


விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்


ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமைமிக்கது


கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்


கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்


நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா


பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்


கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்

****

* பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.

     அரச கட்டளைக்கிணங்க தான், தேடித் தேடிக் கொன்றொழித்த தன் தேச மக்களது ஆத்மாக்கள், நினைவுகள் வழியாக அந்த இராணுவ வீரனை கணந்தோறும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. அந்த ஞாபகங்கள் கொடியவை. யுத்தம் செய்து அங்கவீனத்தோடு மீண்டு வந்துள்ள ஒவ்வொரு போர்வீரனுக்குள்ளும் இவ்வாறான காயங்களுடனான பல ஞாபகங்கள் உள்ளன. அவை ஒரு போதும் ஆற்ற முடியாதவை.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com


நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்


Thursday, October 5, 2017

அவர்கள் நம் அயல்மனிதர்கள் - 07 - எம்.ரிஷான் ஷெரீப்



     சிறைச்சாலைகளைத் தாண்டிச் செல்ல நேரும்போதெல்லாம் ஒரு வாக்கியம் அதன் வாயிலில் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றிருக்கிறோம். எல்லோருக்குமே கண்கள் இருக்கின்றன. ஆனாலும் எம்மைப் பாதிக்காதவற்றை நாம் காண்பதில்லை என்பதே நிதர்சனம். 'சிறைக்கைதிகளும் மனிதர்களே'.

     இந்த வாக்கியத்தை வெறும் வாக்கியமாகக் கருதி நாம் இதனை வாசித்து விட்டு எளிதாகக் கடந்து விடுகிறோம். ஆழ்ந்து நோக்கும்போதே இதன் உள்ளார்ந்த அர்த்தம் எமக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது.

     சடுதியாக மனிதனுக்கு ஏற்படக்கூடிய கோபத்தின் காரணமாகவும், உணர்ச்சிக் கொந்தளிப்பாலும், போதையின் தாக்கத்தாலும், வலியவர்களது தூண்டுதல்களின் காரணத்தாலும் சிறியதாகவும், பாரதூரமாகவும் குற்றங்களைச் செய்துவிட்டு, எம்மைப் போன்ற சக மனிதர்கள் பலரும், இதனை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் கணத்திலும் கூட சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சிறைச்சாலைக்கு வெளியே வெகு சுதந்திரமாக உலவித் திரியும் பயங்கரமான குற்றவாளிகளைப் போலவே, நீதி தேவதையின் கண்கள் பணத்தினாலும், அதிகாரத்தினாலும் கட்டப்பட்டிருப்பதன் காரணத்தால் அநீதமாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகள் பலரும் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

     இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில், நடுத்தர மக்களையும், வறியவர்களையும் குற்றவாளிகளாக்குவதில் பெரும் பங்கு மதுவிடம் இருக்கிறது. மதுபோதை ஏற்படுத்தும் தாக்கத்தினால் குற்றங்களைச் செய்து சிறைக்குச் சென்று பின்னர் தமது நிலைமைக்காகவும், தாம் செய்த குற்றத்துக்காகவும் வருந்துவோர் அநேகம். சடுதியாக சிறைக்குச் சென்று அங்கு தமது ஜீவிதத்தைத் தொடர நேரும் இவ்வாறான சிறைக் கைதிகளை விடவும், தமது வாழ்வாதாரங்களுக்காக இவர்களையே நம்பியிருந்த குடும்பங்கள்தான் இவ்வாறான கைதுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

     இந்த சூழ்நிலையையே சிங்களக் கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்னவின் 'அந்தகாரத்துக்கு முன்பு' எனும் சிங்கள மொழிக் கவிதை மிகத் தெளிவாகவும் காத்திரமாகவும் எடுத்துரைக்கிறது.


அந்தகாரத்துக்கு முன்பு


வாசலருகே மலர்ச்செடியின்
பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே
கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ
அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு
பாடப்படப்போகும் போதனை கீதங்களை
கொழும்புக்குச் சென்று
அப்பாவிடம் உரைப்பீரோ


அமாவாசைக் கனவுகள் வந்து
தம்பியை அச்சுறுத்துகையில்
நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட
யாருமில்லை வீட்டில் இப்பொழுது
இன்றிரவு சொந்தங்கள்
எம் குடிசையில் விழித்திருப்பர்
எவ்வாறிருக்குமோ நாளை
நாம் உணரும் அந்தகார இருள்


வண்ணத்துப் பூச்சிகளே
மெதுமெதுவாக
மறைந்துகொண்டிருக்கிறான் சூரியன்
இனி
பாழடைந்த வெண்ணிலவின் உச்சியில்
உறைந்துவிடும் அம்மாவின் வாசனை


அனைத்தும் வீழ்ந்தழிவதற்கு முன்பு
மயானத்துக்கு வந்து நாளை
கூட்டிச் செல்லுங்கள் அப்பா
சிறைச்சாலைக்கு எம்மையும்


     மது போதை ஏற்படுத்திய தாக்கத்தில் மனைவியைத்தாக்கி, அதில் படுகாயமடைந்த மனைவி இறந்து விடுகிறாள். அத் தம்பதிகளுக்கு வண்ணத்துப்பூச்சியோடு கதைத்துத் திரியும் பருவத்திலொரு மூத்த குழந்தையும், அதற்குத் தம்பியொன்றும் இருப்பது கவிதையின் வரிகளில் புலப்படுகிறது. தந்தையைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு சென்றிருப்பதுவும், தாயின் இறுதிச் சடங்குகள் முடிந்ததன் பிறகு அக் குழந்தைகள் துணைக்கு யாருமற்று தனித்து விடப் போவதையும் இக் கவிதை காத்திரமாக எடுத்துரைக்கிறது அல்லவா?

     இவ்வாறாக சிதைந்து போகும் வாழ்வியல், ஒரு சமூகத்துக்கு மாத்திரமானதல்ல. உலகில் போதையின் பிடியில் செய்யப்படும் குற்றங்களே அநேகமானவையாக இருக்கின்றன. கவிதைகள் வாழ்வியலையே எடுத்துரைக்கின்றன. அவ்வாறான கவிதைகள் மனிதர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்துமானால் அவை மிகச் சிறந்த கவிதைகளாக மாறி விடுகின்றன. அவ்வாறாக, கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்னவின் மிகச் சிறந்த கவிதைகளிலொன்று இது.

     கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்ன 1980 களில் நடைபெற்ற புரட்சிகளில் பங்குகொண்ட முக்கியமான இலக்கியவாதி ஒருவர். 'சந்திரா' என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அவர் இடதுசாரிப் போராளியாகத் திகழ்ந்தவர். அதனால் அவரது கவிதைகள் அனைத்துமே மக்களின் மீட்புக்காகவே இருந்தன. அவரைக் குறித்து அச்சம் கொண்ட அப்போதைய அரசால்  எண்பதுகளின் இறுதியில் அவர் கடத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் கொல்லப்பட்டிருந்தார்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 05 இங்கே 
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 06 இங்கே