Monday, June 1, 2015

அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்


இதற்கு முன்னர் ஒருபோதும்
என் போன்ற யுவதியொருத்தியை
சந்தித்ததில்லையென
தம் மனைவியரிடத்தில் சவால்விடுத்தனர்
எனினும்
அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்

எனது வீடு பரிசுத்தமானதெனச் சொன்னது அவர்கள்தான்
நானுரைத்த எச் சொல்லிலும் தப்பான எதுவுமிருக்கவில்லை
எப்போதும் என்னிடத்தில் அமைதியான தென்றலிருந்தது
எனினும்
அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்

அனைத்து ஆண்களினதும் உரையாடல்கள்
என்னைப் பற்றித் துதி பாடின
அவர்கள் எனது புன்னகையை விரும்பினர்
எனது மடியில்
நவநாகரீகத்தில் ஆர்வம் கொண்டனர்
எனினும்...

அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்


- மாயா ஏஞ்சலோ  
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

மாயா ஏஞ்சலோ (1928 - 2014) :

            1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர்.

            தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன. 
  
நன்றி 
# அம்ருதா இதழ், மலைகள் இதழ், 
பதிவுகள் இதழ், 
இனியொரு இதழ், 
காற்றுவெளி இதழ், வல்லமை இதழ், வார்ப்பு இதழ்