Friday, October 19, 2012

ஏதோவொன்று

வருவதையும் போவதையும்
கூற முடியாத
குளிரொன்றைப் போன்ற அது
தென்படாதெனினும் உணரலாம்
எம்மைச் சுற்றி இருப்பதை

அது எம்மைத் தூண்டும்
கண்டதையும் காணாதது போல
வாய் பொத்தி, விழிகள் மூடி
ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்க

பசியின் போதும்
குருதி பீறிடும் போதும்
அடுத்தவன் செத்துக் கொண்டிருக்கும் போதும்
அமைதியாக
சடலங்களின் மேலால் பாய்ந்து
நாம் வேலைக்குச் செல்லும் வரை

அது
என்னது?
எங்கிருந்து வந்தது?

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் இதழ் 35 - ஜூலை 2012
# எதுவரை
# உயிர்மை
# திண்ணை

Monday, October 15, 2012

வழி தவறிய கவிதையொன்று

நடுச்சாமத்தில்
உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே
மனம் ஓடும் எல்லா இடங்களுக்கும்
அறியா வெளிகளுக்கும்.

‘டொக் டொக் டொக்’
யாரது? உள்ளம் கேட்கும்

‘யார் நீ?’
உரத்த குரலில் வினவுகிறேன் நான்.

‘நான். வந்து… வந்து…
வழி தவறிய கவிதையொன்று.
கதவைக் கொஞ்சம் திறக்க இயலுமா?’

கவிதையொன்றாம்.
வழி தவறி விட்டதாம்.
திறப்பதா கதவை?
எனது கதவைத் திறக்காது விடின்
வழி தவறிப் போகும் கவிதை.
கதவைத் திறப்பின்….
வழி தவறிப் போவேன் நான்.

பரவாயில்லை வருவது வரட்டும்.
மெதுவாகக் கதவைத் திறந்து
கவிதை உள்ளே வர விடுகிறேன்.
எப்படியும் எந்நாளும்
எனதிதயம் வழிதவறிக் கொண்டுதானே இருக்கிறது

- டீ.திலக பியதாஸ
தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்மை
# திண்ணை

Friday, October 5, 2012

சினேகிதனொருவன்

சிநேகிதனொருவன் இருக்கிறான் எனக்கு
ஒரு பயனுமற்ற பொறுக்கியென
அனேகர் கூறும்படியான

அவ்வப்போது நள்ளிரவுகளில்
பயங்கரமான கனவொன்றைப் போல
உறக்கத்தைச் சிதைத்தபடி
வருவான் அவன் எனதறைக்கு

வடையொன்றை, கடலைச் சுருளொன்றை
எனது கையில் திணிக்குமவன்
வரண்ட உதடுகளை விரித்து
குழந்தைப் புன்னகையை எழுப்புவான்

உரையாடல்களை உடைக்கும் சொற்களோடு
சிவந்த விழிகளைச் சிறிதாக்கி
புரியாதவற்றை வினவுவான்
எனது தோள்களைப் பிடித்து
பதிலொன்றைக் கேட்டு
இரு விழிகளையும் ஊடுருவுவான்

அத்தோடு எனது தோள்மீது
அவனது தலையை வைத்து
கண்ணீர் சிந்துவான்

நிறுத்தும்படி கேட்கும்
எனது பேச்சைச் செவிமடுக்காது
ஒரு கணத்தில் இருளில்
புகுந்து காணாமல் போவான்

பகல்வேளைகளில் வழியில்
தற்செயலாகப் பார்க்க நேர்கையில்
தெரியாதவனொருவனைப் போல
என்னைத் தாண்டிச் செல்வான்

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


நன்றி
# உயிர்நிழல் - இதழ் 35, ஜூலை 2012
# மலைகள் இலக்கிய இதழ்
# உயிர்மை
# திண்ணை 
# பதிவுகள்