Tuesday, October 26, 2010

நீ மூழ்கி இறந்த இடம்


நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து
நீ்ரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன்
தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை
பிள்ளைப் பருவ நினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட

நீர் வடிந்தோடும் இடத்தில்
பார்வையில் பட்டும் படாமலும்  அலைந்தவாறு
மாலை மயங்கும் ஒளியின் கீதத்தை இசைக்கிறது
பேய்ப் பட்சியொன்று
சொண்டினால் காவி வந்த இரவை
இராட்சத ஓடையின் மருதமரக்கிளைகளிடையே இட்டு
சடசடவெனச் சிறகடித்துப்  பறந்து செல்கிறது

நீரோடைக்கரையில்
மந்தைகளின் வழித்தடம் ஒன்றில்
பல நூறு, ஆயிரம் குளம்புகளின் தேய்ந்து போன தடயங்கள்
அதனிடையே
அக்கரைக்குச் சென்றதேயன்றி
இக்கரைக்கு மீண்டும் வந்ததற்கான அடையாளங்களின்றிய
பிள்ளையொன்றின் பாதச்சுவடுகள்,
பல தசாப்தங்கள் கடந்தனவாய்....

உற்றார் உறவென்று யாருமற்ற
இடையச் சிறுவனொருவன்
இரவுணவாகக் கிடைக்கும் பாதி ரொட்டியையும்
தண்டனையின் நிமித்தம் இழந்தவனாக
தொலைந்து போன மாடொன்றைத் தேடியவாறு
இரவு முழுதும் புதர்கள் தோறும் அலைந்து திரிந்து
உடைந்து போன கரகரத்த குரலெழுப்பி மாடுகளை அழைக்கும் ஓசை
தொலைவில்
ஓடைக்கு அக்கரையிலிருந்து
கேட்டவாறுள்ளது  இன்னும்

மூழ்காமல் இருந்திடத் தனது கை கால்களை அடிக்கும் வேளை
நீர்ப்பரப்பு கொந்தளிக்கும் ஓசை
இக்கரையை அடைந்த யாரோ மூச்சு இரைத்தவாறு
ஈரத் துணியொன்றை உதறிப்போடும் சப்தம்,
சிறுதடியால் புதரொன்றுக்கு அடித்தவாறு
மிக அருகே அடிவைத்து வரும் ஒலி,
பெயரைத் தானும் அறிந்திராத தனது தாய் தந்தையரிடம்
துயரத்தைச் சொல்லி தனியே விம்மும்
அந்தப் பிள்ளையின் அழுகைக் குரல்
எதையுமே கேளாதவாறு தூங்கிய எனது அழகிய ஊர்
அன்று போலவே இன்றும் உறங்குகிறது,
நிலா இரவை மரித்தோருக்கென வைத்துவிட்டு.

பதினாறாம் குறிச்சியின் புளிய மரத்தின் கீழே
கரை மீட்டெடுத்துக் கிடத்தப்பட்டிருந்தது
அந்த அனாதைப் பிள்ளையின் சடலம்.
ஒரு நாளும் நிரம்பியிராத வயிறு,
பெருமூச்சுகள் இறுகிய சுவாசப்பைகள்
இராட்சத ஓடையின் சேற்று நீரால் நிரம்பியிருந்ததால்
மூழ்கிச் செத்ததாகத் தீர்ப்பாயிற்று.

கூடியிருந்த யாவரும்  கலைந்து சென்றதன் பின்னர்,
எஞ்சியிருந்த ஓரிருவர் இணைந்து
வயல்வெளிக்கு அப்பாலுள்ள ஒதுக்குப்புற நிலத்தில் புதைப்பதற்காக
உனது சடலத்தைக் கொண்டு சென்ற வேளை
நானும் பின் தொடர்ந்தேன்
அழுவதற்கு யாருமற்ற இறுதிக்கிரியை ஊர்வலமொன்றில்

பள்ளிகூடம் போய்வரும்  இடைவழியில்
பிஸ்கட்டுகளைக்
காட்டில் சேகரித்து வரும் காய்களுக்கு
கைமாற்றிக் கொண்ட அதே புளிய மரத்தின் கீழே
மந்தைக் கூட்டம் சூழ்ந்திருக்கச்  சிரித்தவாறு கையசைக்கும்
உனது உருவைக் கண்டு
கணப்பொழுது மறந்து...
நின்று பார்க்கையில்
மரக்கிளையொன்றில் இற்றுப் போய்க்கொண்டிருக்கும்
நீ அணிந்திருந்த கந்தல் சட்டை
உனது மரணத்துக்காக ஏற்றப்பட்ட
ஒரேயொரு வெண்கொடியாக நிலைத்திருந்ததைக் கண்டேன்
பல காலம் சென்ற பின்பும்

இராட்சத ஓடை எழுப்பும் இந்த நீரலைகள்
எப்போழுதேனும்
நிலவலையும் இரவொன்றில் நீ
நீர்ப்பரப்பிலிருந்து வெளிப்பட்டு யாரும் காண்பதற்கு முன்பே
மீள மூழ்கிடுகையில் தோன்றுகின்ற கொந்தளிப்போ......
தொலைவிலிருந்து வந்து
பள்ளம் நோக்கி மிதந்து செல்லும்
இந்தச் சேற்று நுரை
இராட்சத ஓடையின் அடிப்பரப்பில்
சேற்றினிடையே ஒளிந்து கொண்டு,
இன்னும் குமிழ்களாயெழுகின்ற
உனது இறுதி மூச்சோ.....

மூலம் - அஜித் சி ஹேரத்
தமிழில் - ஃபஹீமாஜஹான்


நன்றி
# கலைமுகம் 50 ஆவது சிறப்பிதழ்
# உயிர்மை
# ஊடறு
# பெண்ணியம்

Monday, October 11, 2010

இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்

அன்பின் சுந்தரம்,

நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன
ஏழை வானத்தின் கீழ்
அந்தகார இரவு
முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது
ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே
எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென
உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி
அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு

அன்றைய நள்ளிரவு இருள்
பஞ்சாயுதங்கள் வீழ்ந்த களப்பு
அப்பா இல்லாமல் போன காலம்
குஞ்சுகளுக்கு யாருடைய காவல்

அங்கிருந்தும் இங்கிருந்தும் கொஞ்சம் பேர்
வந்து அடிக்கடி விசாரிக்கிறார்கள்
ருசி தானே இந்த (சிறை) உணவு
வேறெங்கும் கிடைத்ததா இதை விடவும் சுவை உணவு

புள்ளினங்கள் பறந்தாலும்
பாடல்கள் இல்லை அவையிடத்தே
பூக்கள் மலர்ந்தாலும்
மிதிபட்டுச் சிதையும் அக்கணமே
இழுத்துப் பிடித்த வீணையின் நரம்புகள்
முன்பெழுந்த இன்னிசையை இனியெழுப்பாது

தப்பித்தோடினால் மீளவும்
முட்கம்பிகளில் சிக்கி விட நேரிடும்
விழி உயர்த்திப் பார்த்தால்
மீண்டும் தலைதூக்க முடியாமல் போய்விடும்
ஒரு துளி விழிநீர் சிந்தினால்
முழுப் பரம்பரையும் சாம்பலாகும்

அதனால் உணர்ச்சியற்றிருக்கிறேன்..
எவர்க்கும் கேட்டுவிடாதபடி சுவாசிக்கிறேன்..

நீங்கள் அங்கு உறங்கும் வரை.

இப்படிக்கு,
உங்களுடைய,
ராதா.

மூலம் - மாலதீ கல்பனா எம்ப்ரோஸ் 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை


நன்றி
# காலச்சுவடு இதழ் 130, ஒக்டோபர் 2010
# உயிர்மை
# பெண்ணியம்
# திண்ணை
# தடாகம்
# தமிழ்முரசு அவுஸ்திரேலியா
# ஓவியர் ரவி

Friday, October 1, 2010

இறுதி மணித்தியாலம்


கிலட்டின் தயாராகிறது
இறுதி உணவுபசாரத்துக்கும்
சூழ்ச்சி செய்யாமல்
தேர்ந்தெடுங்கள்
தேசியவாதிகளும் விடுதலை விரும்பிகளும்
எங்கள் துணிச்சல்மிக்கவர்களைப் பெயரிட்டுள்ளனர்

ராசாக்கள் தந்த சுகம்
மாளிகை அந்தப்புரம்
கை விட்டுப்போகுமென்ற நடுக்கத்தில்
தேசக் காதலர்கள் அழுகிறார்கள்
வெளிப்படையாகவே அவர்கள்
பகல் கொள்ளைக்காரர்கள்
ஊழல்காரர்கள் கொலைகாரர்கள்
சுரண்டிச் சாப்பிடுபவர்கள்

ரோசா நிறத்து விடுதலைவிரும்பிகள்
(சுய இருத்தலுக்கான)
உபாயமொன்றை
மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்
தேர்ந்தெடுத்த அனைத்தும் தவறானவை
பொருட்டின்றிக் கைவிடப்பட்ட
வலுவோடும் அன்போடும்
துயில்கின்றனர் பெருநிலத்தின் கீழே
வடக்கிலும் தெற்கிலும்
பல்லாயிரக் கணக்கில்
தொண்டைகிழிய
இரு கைகளுயர்த்திச் சொல்கிறார்கள்
அவர்களது தந்தையினதும் சகோதரனினதும்
அயலவனினதும் கொலைகாரர்கள்
எமது மீட்பர்கள்தானென

கனவுகளைக் காண்பவனும்
கனவுகளைக் கட்டியெழுப்புபவனும்
எம்முடனேயே மரித்துப்போகட்டுமென விதிக்கப்பட்டுள்ளது
இப்பொழுதே
கண்டங்களின் வேட்டைக்காரர்கள்
துணிச்சல்காரர்களை
விலைக்கு வாங்கிவிட்டனர்

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை

நன்றி
# உயிர்நிழல் இதழ் 32, ஏப்ரல் - ஜூன், 2010
# உயிர்மை
# திண்ணை