Tuesday, August 17, 2010

ஓர் மடல்

*நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி
இங்கும் இல்லாமலில்லை அம்மா
ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி
புதிது புதிதாய்ச் செய்கிறார்கள்

விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால்
காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன
உறக்கமேயில்லாமல் இரவு முழுதும் ஆடுகிறேன்
காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன்

உடலழகு தொலைந்துவிடுமென்று
இரவுணவையும் தருகிறார்களில்லை
இளம்பெண்கள் பத்துப் பேர் நாம்
அவர்களறியாமல் தேனீர் தயாரித்துக் கொள்கிறோம்

பாடல் ஒளிப்பதிவுகளுக்குப் போனால்
ஆயிரம் ரூபாயளவில் கிடைக்கும்
மேலதிகமாக ஆனாலும்
மூட்டுக்களிலும் முதுகெழும்பிலும் வலியெடுக்கும்

புதிய நடனமொன்றின் மெல்லிய ஆடையில்
கவரப்பட்ட செல்வந்தனொருவன்
பரிசுகள் தந்திட அழைக்கிறான்
நான் முடியாதென்றே மறுத்து வருகிறேன்

விழா நாட்களில் எனக்கு எனது
அம்மா சொன்னவை நினைவில் எழுகின்றன
உண்மைதான் சில விழிகளில்
பெரும் அந்நியத்தைக் காண்கிறேன்

ஒன்பது நாட்களுக்குக் காட்சிகள் தொடர்ந்திருக்க
நேற்றென்னை அந்த வருத்தம் பீடித்தது
ஆனாலும் அதனைக் கவனத்தில் கொள்ளாமல்
வீட்டைப் பற்றி எண்ணி எண்ணியே ஆடினேன்

அம்மாவின் மருந்துகளையும்
அப்பாவின் திதிக்கான பொருட்களையும்
வாங்கத் தேவையான பணத்தை இதோ அம்மா
இந்தக் கடிதத்துடனேயே அனுப்பியிருக்கிறேன்

சிகரங்களேறி உலகையே வென்றெடுத்து
எப்பொழுதேனும் மகள் வருவாளென
வேலிக் கம்பில் கைகளை வைத்தபடி அம்மா
பார்த்திருப்பது எனக்குத் தெரிகிறது

* நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி - கிராமிய ஆடல், பாடல்வகைகள்

பின்குறிப்பு - பெரும்பாலானோர் அறிந்திராத மிகவும் அரிதான அனுபவமொன்று இக்கவிதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நகரத்தின் நாட்டியக் குழுவொன்றில் தனது நடிப்புத் திறனை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் இப் பெண் அவளது அன்னைக்கு அனுப்பும் கடிதப் பிரதியொன்றினூடாக அவளது நிஜ வாழ்வு வெளிப்படுகிறது. தொலைத் தொடர்பு சாதனங்களை அலங்கரித்தவாறு பளிச்சிடும் வாழ்வுகளின் பின்னணியில் புதைந்துள்ள அந்தகாரத்தின் நிஜம் மிகவும் முரண்நகையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை


நன்றி
# தினகரன் வாரமஞ்சரி (15.08.2010)
# நவீன விருட்சம்
# உயிர்மை
# ஊடறு
# பெண்ணியம்
# கூடு

Sunday, August 1, 2010

திருகோணமலை சந்திரன்

சதுர்ஷன்
ராஜனின் இளைய மகன்
தினந்தோறும் மாலையில்
விழிகளால் வானைத் தொட்டு
நிலவையழைப்பான்
சின்னஞ்சிறு கரங்களை அசைத்தவாறு

..நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா..

அதோ அவ்வேளைதான்
கோணேஸ்வரன் தேவாலய உச்சி நோக்கிக்
கைகூப்பியவாறு
திருகோணமலை வானத்துக்கு
நிலவு எழுந்து வரும்

மார்கழி மாதக் குளிர் நாளொன்றில்
இரவு மறந்து போய்
நிலவை கைவிட்டுச் சென்றிருந்தது வானில்
பனிப்புகாரில் சூரியன் மூடுண்ட வேளையில்
மல்லிகைகள் கண்கலங்கி
மகரந்தங்களை வழியவிட்டு அழுதன

போகுமிடம் தெரியாமல்
சீனத் துறையின் உள்ளே
நங்கூரமிட்ட நிலவு
வெண்பனித் துகள்களை ஒவ்வொன்றாய்ச் சேகரித்தது
திருகோணமலையின் சந்தியொன்றில்
இரத்தத் துளிகளில் தோய்ந்த
மல்லிகையொன்றிலிருந்து சுகந்தம் வீசியது

பட்சிகளின் பூபாளம் கேளாத
திருகோணமலையின்
காலைப் பொழுதொன்றில்
முற்றத்தில் இறங்கிய புதல்வனுக்கு
நிலவின் தனித்துப் போன இரு விழிகள் தெரிந்தன
இளஞ்சூரியனின் கிரணங்களுக்குப் புலப்படாத
மிருதுவான விரல்நுனிகளால் அது
புதல்வனின் தலைமீது சாமரம் வீசியது

அந்த மார்கழி முதல்
பணி முடித்துச் சூரியன் போகும் அந்தியானால்
சின்ன விழியொன்று  வானைத் தொட்டு
நிலவையழைக்கும்
பிஞ்சுக் கரங்களை அசைத்தவாறு

மூலம் - மஞ்சுள வெடிவர்தன (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


நன்றி
# எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010
# உயிர்மை
# கூடு