Thursday, July 15, 2010

பிறக்காத கவிதை

("வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையின் போது கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட கர்ப்பிணித்தாயொருவரின் புகைப்படத்தைப் பார்த்ததால்")

கண்களைக் கூட திறக்காத
குருவிக் குஞ்சொன்று
தாயின் கர்ப்பத்துள்ளேயே
சதை வேடர்களுக்கு
இரையானது
வெடித்துத்
துண்டுகள் வேறாகிய
தொப்புள்க் கொடியின் மேலாக
எச்சில்படுத்தப்படாத இறகொன்று
இரத்தம் தோய்ந்து வெளிப்பட்டது

பச்சிளம் உதடுகளில்
கறப்பதற்குத் தளும்பிப் பார்த்திருந்த
முலைக்காம்புகள் ஊடாக
கண்ணீரையொத்த பாற்துளிகள் வழிந்தன
குருதியோடு குருதி கலந்து
தாய்ப்பாலால் நிறமடைந்து
பேசாத பெருநிலமும்
பெருமூச்செறிந்து
விம்மியழுதது கேட்டது

பிள்ளை கனவுகள் கண்டிருக்கும்
பாற்சிரிப்பு முகத்தில் பூத்திருக்கும்.
தாய் கனவுகள் வளர்த்திருப்பாள்
வெள்ளைச் சிரிப்பை மெல்லக் கேட்டிருப்பாள்.
வெறிபிடித்தவர்கள் வந்து
கனவுகளை வெடிக்கச் செய்திருக்கலாம்
தசைத்துண்டுகள் மீது
ஊறிக் கலைந்து சென்றிருக்கலாம்

உன்னைப் பலி கொண்ட காட்டுமிருகங்கள்
கொள்ளையடிக்கிறார்கள்
பிறந்த பூமியை.
மோப்பம் பிடிக்கிறார்கள்
நித்தமும் இரத்தச் சுவை வேட்டைகளை.
பிறந்திருந்தாலும்
வாழ்வொன்று எங்கே இருக்கும்
பறக்கின்ற வானத்தையும்
அவர்கள் எடுத்திருக்க

அழாமலே இருக்கிறேன்.
வன்னி அதிக தூரம் எனக்கு. பொறுத்திருக்கிறேன்.
அசையாத
பச்சிளம் இறகை நோக்கி
கனவொன்றில்
எனது கையினைக் கொண்டுசென்று
விரலைப் பற்றுமோ என
பார்த்திருக்கிறேன்

மூலம்: மஹேஷ் முணசிங்ஹ 2009 03 (சிங்களம்)
தமிழில் : ஃபஹீமாஜஹான்


நன்றி
# உயிர்நிழல் இதழ் 32, ஏப்ரல் - ஜூன், 2010

Thursday, July 1, 2010

மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

என்னிடம் கூறப்பட்டதைப்போலவே - அதிகாலையில்
மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை
மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்

நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் - அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது

உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக

கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட
உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே

மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
        இலங்கை


நன்றி
# சொல்வனம் இதழ் - 27
# உயிர்மை
# நவீன விருட்சம்
# கூடு