Monday, November 30, 2009

எங்களது ராஜாக்கள் அல்ல



    ஒரு தேசத்தில் மக்கள் நோய்களால் துன்புற்றுக் கொண்டிருந்தார்கள். கொள்ளை நோயைப் போன்ற கடுமையான நோய்கள் கூட பரவும் அபாயம் இருந்தது. குடிமக்கள் நோயால் இறந்துகொண்டே இருப்பதால் உடனடியாக ஏதாவது தீர்வொன்றினைக் கண்டறியும்படி அந் நாட்டு மக்கள் அரசனைக் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

    அரசன், தனது ராஜ சபையைக் கூட்டி விசாரித்தபோது 'சட்டதிட்டங்கள் போதாது' என்பது மந்திரி, பிரதானிகளின் கருத்தாக இருந்தது. அதனால் ஒரே இரவில் புதுத் திட்டமொன்று கொண்டு வரப்பட்டது.

    ' நோய்க்குக் காரணமான அனைத்தும் அழிக்கப்படவேண்டும்' என்பதே அந்தத் திட்டமாக இருந்தது.

    'இனி நோய்ப்பயம் நீங்கிவிடும்' என மக்கள் எண்ணினாலும், நோய் மேலும் மேலும் பரவிக் கொண்டே இருந்தது. இருந்த மருந்துகளையெல்லாம் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். போலி மருந்துகள் நாடு முழுவதும் விற்கப்பட்டன. போலி வைத்தியர்களும் நிறைய உருவாகியிருந்தனர். மந்திரி, பிரதானிகளுக்கு மருந்துக் கொள்ளையர்களிடமிருந்தும், போலி வைத்தியர்களிடமிருந்தும் தீர்வை, கப்பமென நிறையக் கிடைத்தன.

    சாவுகள் முடிவின்றித் தொடர்ந்ததால் பொதுமக்கள் அரண்மனைக்கு முன் கூடி கோஷங்களை எழுப்பினர்.
   
    ' நோய்க் காரணிகள் எதுவும் அழிக்கப்படவில்லை' எனக் கூச்சலிட்டனர்.

    'நோய்க் காரணிகள் இன்னும் கொஞ்சம்தான் எஞ்சியிருக்கின்றன. அது மட்டுமன்றி, இது போன்ற வியாதிகள் மற்ற நாடுகளிலும்தான் இருக்கின்றன. உங்களில் எவனுக்காவது அதைக் கட்டுப்படுத்தும் திறமை இருக்குமென்றால் முன்னால் வரலாம்' என அரசன் கூறினான்.

    அப்பொழுது ஒரு ஆண்மகன் முன்னால் வந்தான்.

    ' இந்த வியாதிகளின் விஷக் கிருமிகள் அத்தனையையும் உன்னால் அழிக்க முடியுமா?' என அரசன் அவனிடம் கேட்டான்.

    'ஆம். முதலில் உங்கள் சட்டதிட்டத்தின்படி நோய்க் காரணிகள் - அதாவது நோய்கள் உருவாகும் சூழலும், நோய்க் கிருமிகளை பாதுகாப்பவர்களும் அழிக்கப்படவேண்டும்' என்றான் அவன்.

    குடிமக்களும் அதையே ஏகோபித்தனர்.

    'நோய்க் கிருமிகளை பாதுகாப்பவர்கள் யார்?' இது அரசனின் கேள்வியாக இருந்தது.

    'அவர்கள் வேறு யாருமல்ல. அரசன், மந்திரி பிரதானிகள்தான்' அவன் பதிலளித்தான்.

    கடுங்கோபங்கொண்ட அரசன்,

    'இவன் ஒரு ராஜதுரோகி. உடனே கொல்ல ஏற்பாடு செய்யுங்கள்' என அரச பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான்.

    'ராஜதுரோகியான பின்பு, இம் மரணதண்டனையை இல்லாமலாக்கச் செய்யும்படியான காரணங்கள் ஏதாவது உன்னிடம் இருக்கிறதா?' அரசன் அவனிடம் கேள்வியெழுப்பினான்.

    அவன் இவ்வாறு பதிலளித்தான்.

    ' உங்களது நாட்டில் எங்களுக்கென எஞ்சியிருப்பது மரணம் மட்டும்தான். நோய்க் கிருமிகளால் செத்துப் போவது அல்லது உங்களது கட்டளையின் பிரகாரம் கொல்லப்படுவது இவையிரண்டும் மட்டும்தான். இரண்டுமே உங்களது. ஆகவே நீங்களே இரண்டிலொன்றைத் தீர்மானிப்பது சிறந்தது'.

மூலம் (சிங்கள மொழியில்) - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா 
(Mawatha anka 42 - 1987 April-June)
 

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி 
# உயிர்மை